பாகிஸ்தான் - பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரில் உள்ள செரீனா நட்சத்திர விடுதியில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை கார்க்குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கான சீனத் தூதுவரை இலக்குவைத்து இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் நோங் ரோங் நேற்றிரவு இந்த விடுதியில் இரவு உணவு நேரச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு முடிந்து அவர் வெளியேறிய சில நிமிடங்களில் நட்சத்திர விடுதியின் வாகனத் தரிப்பிடத்தில் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் இந்த விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் வெடிகுண்டு வெடித்தபோது அங்கு இல்லை என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது உறுதிப்படுத்தினார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். எங்களது தற்கொலை குண்டுதாரிகளே இந்தத் தாக்குதலை நடத்தினர் என தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாடல் தகவல் வெளியிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் குறித்து சீனத் தூதரகத்தை அணுகி சா்வதேச ஊடகங்கள் கருத்தறிய முயன்றபோதும் தூதரகத் தரப்பிலிருந்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
தாக்குதல் இடம்பெற்ற நட்சத்திர விடுதி அதியுயா் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்திலேயே அமைந்துள்ளது. இந்த விடுதிக்கு அருகிலேயே ஈரானிய துணைத் தூதரகம் மற்றும் பலூசிஸ்தான் மாகாண ஆளுநரின் இல்லம் என்பனவும் அமைந்துள்ளன.